Archives: பிப்ரவரி 2018

காணாமல் போனது, கண்டு பிடிக்கப்பட்டது

என்னுடைய மாமியார் எனது உறவினர் ஒருவரோடு கடைக்குச் சென்றபோது, வழி தவறிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் என் மனைவியும் பதறிப்போனோம். அம்மாவிற்கு நியாபக மறதியும் குழப்பமும் காணப்பட்டது. அவர்களால் என்ன செய்கிறார்களென்பதைச் சொல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருப்பார்களா? அல்லது ஏதாவது ஒரு பஸ்ஸில் அது அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றெண்ணி ஏறியிருப்பார்களா? மிக மோசமான காட்சிகளின் எண்ணங்கள் எங்கள் மனதில் வட்டமிட, நாங்கள் தேவனிடம், தயவுகூர்ந்து அவர்களைக் கண்டுபிடித்துத் தாரும் என்று கதறிக் கொண்டே தேட ஆரம்பித்தோம்.

சில மணிகளுக்குப் பின்னர் பல மைல்களுக்குப்பால் ஒரு சாலையின் வழியே தடைபட்டு என் மாமியார் நின்றதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் படியான ஆசீர்வாதத்தை தேவன் எங்களுக்குத் தந்ததை நினைத்துப் பார்த்தோம். பல மாதங்களுக்குப் பின்னர், அவர்களது எண்பதாவது வயதில், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் திரும்பினார்கள்.

இயேசு மனிதர்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிட்டு இந்த எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்த பின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு... தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடே கூட சந்தோஷப்படுங்கள் என்பான்
(லூக். 15:4-6).

மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எண்ணி எல்லாம் இருக்கின்றனவா என உறுதிப்பண்ணிக் கொள்வார்கள். அதே போலவே இயேசுவும் தன்னை ஒரு மேய்ப்பனாக பாவித்து ஆடுகளாகிய நாம் ஒவ்வொருவரையும் - இளம் வயதினரோ, முதியவர்களோ எல்லாரையும் அவர் அதிகமாய் மதிக்கிறார். நாம் நம் வாழ்வில் நம் நோக்கத்திற்காக தேடி அலைந்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு அது இன்னமும் பிந்தி விடவில்லை. தேவன் நம்மை அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்.

பயம் நீங்குதல்

நம்முடைய உடல் நம்முடைய உணர்வுகளான அச்சம் பயம் போன்றவற்றிற்கு எதிர் வினையைத் தரும். வயிறு கனத்தலும் இருதய படபடப்பும், மூச்சுத்திணறலும் நம்முடைய பதட்டத்தின் அடையாளங்கள். நம்முடைய உடலமைப்பு மூலம் இத்தகைய அமைதியற்ற உணர்வுகளைப் புறக்கணித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஒரு நாள் இரவில் இயேசு ஐயாயிரம் பேருக்கும் மேலானோருக்கு உணவளித்த போது நடந்த அற்புதத்தைக் கண்ட சீடர்களை பயத்தின் அலைகள் சூழ்ந்து கொண்டன. தேவன் அவர்களை பெத்சாயிதா பட்டணத்திற்கு அனுப்பி விட்டு தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அந்த இரவிலே அவர்கள் காற்றை எதிர்த்து தண்டு வலித்து தங்கள் படகை ஓட்டிக் கொண்டிருக்கையில் இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அவர்கள் இயேசுவை ஓர் ஆவேசம் என எண்ணி பயந்தனர் (மாற். 6:49-50).

ஆனால் இயேசு அவர்களிடம் பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள் என்று மேலும் உறுதியளிக்கின்றார். இயேசு அவர்களுடைய படகில் ஏறியதும் காற்று அமர்ந்தது. அவர்களும் கரையை அடைந்தனர். அவர் தந்த சமாதானத்தைப்பெற்றபோது, அவர்களுடைய அச்ச உணர்வு அமைதியடைந்தது.

பதட்டத்தினால் நாம் மூச்சற்று உணரும் போது, நாம் இயேசுவின் உறுதியான வல்லமைக்குள் இளைப்பாறுவோம். அவர் நம்மைச் சுற்றியுள்ள அலைகளை அமைதிப்படுத்துவார் அல்லது நம்மை பெலப்படுத்தி அவற்றை எதிர் நோக்கச் செய்வார்.  அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி. 4:7) கொடுக்கிறார். நம்முடைய பயங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆவியையும், உடலையும் அமைதிப்படுத்துகின்றார்.

பயமில்லாமல் கொடுத்தல்

என்னுடைய மகன் சேவியர் ஆறு வயதாயிருக்கையில் என்னுடைய சிநேகிதி தன்னுடைய தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். சேவியர் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் சிலவற்றை அச்சிறுவனுக்குக் கொடுக்க விரும்பினான். சேவியரின் இந்த பெருந்தன்மையை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். அவன் பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மையொன்றைக் கொடுக்க முன் வந்தபோது, அப்பொம்மையை வாங்குவதற்கு என் கணவர் எத்தனை இடங்களுக்குச் சென்று அநேகக் கடைகளைத் தேடி அலைந்து வாங்கி வந்ததை நினைத்தேன். இப்படி கிடைப்பதற்கரிய அந்த பொம்மையை என் சிநேகிதியும் தாழ்மையுடன் நிராகரித்தாள். ஆனால் சேவியர் அந்த பரிசை சிறுவனின் கரங்களில் வைத்து என்னுடைய தந்தை எனக்கு நிறைய பொம்மைகளை பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்துள்ளார் என்றான்.

சேவியர் தன்னுடைய கொடுப்பதின் உறுதியை என்னிடமிருந்தே கற்றுக் கொண்டாலும் நான் தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்ற வளங்களை இறுகப் பற்றிக் கொள்பவளாக இருக்கின்றேன். ஆனால் என்னுடைய பரலோகத் தந்தை எனக்குத் தேவையான யாவற்றையும் எனக்குத் தருகிறார். எனவே நான் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

பழைய ஏற்பாட்டில் தேவன் தங்களுக்குத் தந்தவற்றில் ஒரு பகுதியை லேவியர்களான ஆசாரியர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தேவனை நம்பும்படி கட்டளையிட்டார். ஆசாரியர்கள் அவற்றைக் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு தர வேண்டுமெனவும் கட்டளையிட்டார். ஜனங்கள் கொடுப்பதற்கு மறுத்த போது மல்கியா தீர்க்கதரிசி அவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள் (மல்கி. 3:8-9) எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் கொடுக்கும்போது தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் (வச. 10-11) மற்றவர்களும் இவர்கள் பாக்கியவான்களென்பதைத் தெரிந்து கொள்வார்கள் (வச. 12).

நம்முடைய பணம் நம்முடைய திட்டங்கள். தேவன் நமக்களித்த கொடைகள் யாவற்றையும் நாம் கையாண்டாலும் தேவனுக்குக் கொடுத்தல் என்பது ஒரு வகை ஆராதனையாகும். தாராளமாகவும் தைரியமாகவும் கொடுப்பது அன்புள்ள நம் தேவன் பேரிலுள்ள நம்முடைய நம்பிக்கையைக் காட்டுகிறது - அவர் நம்முடைய தாராளமான கொடையாளர்.

நம்முடைய உறுதியான அஸ்திபாரம்

அநேக ஆண்டுகளாக எங்கள் பட்டணத்தின் மக்கள் நிலச்சரிவுக்குள்ளாகக் கூடிய பகுதியில் வீடுகள் கட்டவும் வீடுகள் வாங்கவும் செய்தனர். சிலருக்கு அந்த நிலப்பகுதியின் நிலையற்றத் தன்மை தெரியும். வேறு சிலருக்கு அதைப் பற்றியே தெரியாது. புவியியலாளர்களும் பட்டணத்தின் ஒருங்கமைப்பாளர்களும் பாதுகாப்பான எச்சரிப்பு விளக்கப்படவில்லை அல்லது அலட்சியப்படுத்தப்பட்டது (த கெசட் கொலோரடோ ஸ்பிரிங்ஸ், ஏப்ரல் 27, 2016) அங்குள்ள வீடுகளிலிருந்து காணக்கூடிய காட்சி பிரமிக்கச் செய்யும். ஆனால் வீட்டின் கீழேயுள்ள நிலமோ அதன் அமைப்பின்படி அழிவுக்குள்ளாகக் கூடியது, ஆபத்தானது.

முந்தைய இஸ்ரவேலரில் அநேகர் விக்கிரக வணக்கத்தை விட்டு விடும்படி ஜீவனுள்ள தேவன் கொடுத்த எச்சரிப்பை அலட்சியப்படுத்தினர். அவர்களின் கீழ்படியாமையால் கிடைத்த சோக முடிவை பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற போதிலும், தேவன் தம்மிடம் திரும்பி, தம்முடைய வழிகளைப் பின்பற்றும் தன்னுடைய ஜனங்களுக்கு மன்னிப்பு நம்பிக்கை என்ற செய்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

ஏசாயா தீர்க்கதரிசி பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் (ஏசா. 33:6) எனக் கூறுகிறார்.

இன்றைக்கும் பழைய ஏற்பாட்டுக் காலங்களிலிருந்தது போல, தேவன் நாம் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். நம் வாழ்வை எதின் மீது கட்டப் போகிறோம்? நம்முடைய சொந்த வழிகளில் நடக்கப் போகிறோமா? அல்லது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்றும் நிலைத்திருக்கும் அவருடைய கொள்கைகளைத் தழுவிக் கொள்ளப் போகிறோமா?

நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் மணல் தான் (எட்வர்ட் மோட்)

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக. 

 

புதிதாக வாழுதல்

ஒரு பள்ளியின் சிறந்த மாணவர்கள் கல்விச் சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது கைதட்டல்கள் முழங்கின. ஆனால் அதோடு நிகழ்ச்சி முடிவடையவில்லை. அடுத்த விருது பள்ளியின் “சிறந்த” மாணவர்கள் அல்ல, மாறாக மிகவும் மேம்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் தோல்வியடைந்த பாடத்தில் முன்னேற, சீரழிக்கும் நடத்தையை மாற்றிக்கொள்ள அல்லது வகுப்புக்கு தவறாமல் வருகை தரக் கடினமாக உழைத்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து கைதட்டி, தங்கள் பிள்ளைகள் உயர்ந்த பாதைக்குத் திரும்பியதை ஏற்றுக்கொண்டனர். அவர்களின் முந்தைய குறைபாடுகளைப் பார்க்காமல் அவர்கள் புதிய பாதையில் நடப்பதைக் கண்டனர்.

நமது பழைய வாழ்க்கையை அல்ல, இப்போது கிறிஸ்துவில் அவருடைய பிள்ளைகளாக நம்மை நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படிப் பார்க்கிறார் என்பதைச் சிறிய கற்பனையாகச் சிந்திக்க வைக்கும் காட்சியாக இது அமைந்திருந்தது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (யோவான் 1:12) என்று யோவான் எழுதினார்.

என்ன ஒரு அன்பான நோக்கம்! எனவே பவுல், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்(தீர்கள்)த” (எபேசியர் 2:1) என்று புதிய விசுவாசிகளுக்கு நினைவூட்டினார். ஆனால் உண்மையில், “நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (வ.10).

இதேபோல பேதுருவும், நம்மைக்குறித்து “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்றும் முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்(1 பேதுரு 2:9-10) என்றும் எழுதினார். தேவனின் பார்வையில், நம்மீது நமது பழைய வாழ்க்கைக்கு அதிகாரமில்லை. தேவன் பார்ப்பது போல் நாமும் நம்மைப் பார்ப்போம், புதிய வாழ்வில் நடப்போம். 

 

மனந்திரும்பும் இருதயம்

ஒரு நண்பர் தனது திருமண உறுதிமொழியை மீறினார். அவரே தனது குடும்பத்தை அழிப்பதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது. அவர் தனது மனைவியுடன் சமரசம் செய்ய முயன்றபோது, என்னிடம் ஆலோசனை கேட்டார். அவர் வார்த்தைகளில் அல்ல செயல்களில் காட்ட வேண்டுமென்றும்; தனது மனைவியை நேசிப்பதிலும் பாவத்தின் எந்த வடிவத்தையும் அகற்றுவதில் முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்.

கர்த்தருடன் செய்த உடன்படிக்கையை மீறி அந்நிய தேவர்களைப் பின்பற்றியவர்களுக்கு எரேமியா தீர்க்கதரிசி இதே போன்ற ஆலோசனை வழங்கினார். அவரிடம் திரும்புவது நல்ல துவக்கமாக இருந்தாலும், அது மட்டும் போதாது (எரேமியா 4:1). அவர்கள் சொல்லோடு அவர்கள் செயல்களையும் இசைவாகச் சீரமைக்க வேண்டும். அது அவர்களின் “அருவருப்பான விக்கிரகங்களை” அகற்றுவதைக் குறிக்கிறது (வ. 1). எரேமியா, அவர்கள் “உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும்” அர்ப்பணித்தால், தேவன் தேசங்களை ஆசீர்வதிப்பார் என்றார் (வ. 2). மக்கள் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதுதான் பிரச்சனை. அவர்களின் இருதயம் அதிலே இல்லை.

தேவனுக்கு வெறும் வார்த்தைகள் வேண்டாம்; அவருக்கு நம் இருதயங்கள் வேண்டும். இயேசு கூறியது போல், “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்” (மத்தேயு 12:34). அதனால்தான், எரேமியா தனக்குச் செவிகொடுப்பவர்களை “நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்” (எரேமியா 4:3) என்று ஊக்கப்படுத்துகிறார்.

கவலைப்படத்தக்கதாக, பலரைப் போலவே, எனது நண்பரும் சரியான வேதாகம அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை, அதன் விளைவாக அவரது திருமண வாழ்வை இழந்தார். நாம் பாவம் செய்யும்போது, அதை ஒப்புக்கொண்டு அதிலிருந்து திரும்ப வேண்டும். தேவனுக்கு வெற்று வாக்குறுதிகள் வேண்டாம்; அவருடன் உண்மையிலேயே இசைந்திருக்கும் ஒரு வாழ்க்கையை விரும்புகிறார்.